பிரிட்டிஷ் பௌதீக விஞ்ஞானியும், கணித நிபுணருமான ஸ்டீஃபன் ஹாக்கிங் சமீபத்தில் எழுதி இன்னும் வெளியில் வராத நூலில் கடவுள் இந்த உலகத்தைப் படைக்கவில்லை என்று கூறியுள்ளார். கருந்துளை பற்றிய தனது சிந்தனைகளால் விஞ்ஞான உலகை உலுக்கிய ஸ்டீபன் ஹாக்கிங் "தி கிராண்ட் டிசைன்" என்று தலைப்பிடப்பட்ட இந்த புதிய நூலை தன் சக விஞ்ஞானியான லியனார்ட் மிளோடினோவ் என்பவருடன் சேர்ந்து எழுதியுள்ளார்.

இந்த பூமி என்பது ஏதோ மனிதனை மகிழ்ச்சிப் படுத்த அக்கறையுடன் கவனமாக வடிவமைக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்று கூறுகிறார் ஸ்டீபன் ஹாக்கிங். ஏனெனில் இன்னொரு நட்சத்திரத்தை இன்னொரு கோள் சுற்றிக் கொண்டிருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்ட பிறகே நாம் எதையும் உத்தரவாதமாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதுதான் இவரது வாதம். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டீபன் ஹாகிங் எழுதும் பெரிய புத்தகம் இது என்று கூறப்படுகிறது.

இவர் 1988-ஆம் ஆண்டு எழுதி வெளியிட்டு மிகப்பிரபலமடைந்த "காலம் பற்றிய ஒரு சுருக்கமான வரலாறு" என்பதில் உலகைப் படைத்தவர் என்று ஒருவர் இருந்திருக்க வேண்டும் என்று கருதினார். அதாவது உலகத் தோற்றம் பற்றிய முழு கோட்பாடு என்பது மனித அறிவின் உச்சகட்ட சாதனையாகும், பிறகுதான் நாம் கடவுளின் மனம் என்ன என்பதை அறிய முடியும் என்று அந்த நூலில் அவர் கூறியிருந்தார்.

ஆனால் தற்போது "தி கிராண்ட் டிசைன்" என்ற நூலில் அந்த நிலைப்பாட்டிலிருந்து அவர் விலகியதாகவே தெரிகிறது. "புவியீர்ப்பு விசை என்ற விதி இருக்கும்போது பிரபஞ்சம் ஒன்றுமில்லாததிலிருந்து தானே உருவாக முடியும்." என்று கூறும் ஸ்டீபன் ஹாகிங் கடவுள் ஒருவர் உலக சிருஷ்டியின் பின்னணியில் இருந்தார் என்பதை மறுக்கிறார்.

"திடீரென உருவாகும் படைப்பு என்பதுதான் உண்மை அல்ல ஏதோ ஒன்று உள்ளது என்பதையும், ஏன் பிரபஞ்சம் உள்ளது, ஏன் நாம் இருக்கிறோம் என்பதையும் உறுதி செய்கிறது. பிரபஞ்சத்தை இயக்க வைக்கும் சக்தியாக கடவுள் என்ற ஒருவரை வரவழைக்க வேண்டியதில்லை." என்கிறார் ஹாக்கிங். இந்த நூலில் ஹாக்கிங், இந்தப் பிரபஞ்சம் உண்டானதில் கடவுளின் பங்கு இருக்கலாம் என்ற நியூட்டனின் கோட்பாட்டை விமர்சனம் செய்துள்ளார்.

ஆனால் ஹாக்கிங் எதையும் உறுதியாகக் கூறமுடியாது என்றுதான் கூறுகிறார். இதெல்லாம் எளிமையான விசயம் அல்ல என்கிறார். பிரபஞ்சம் எப்படி இயங்குகிறது என்பதை அறிய அது ஏன் இவ்வாறு உள்ளது ஏன் வேறுமாதிரியாக இல்லை என்பதை அறிவது அவசியம் என்கிறார். இதுதான் வாழ்க்கை, பிரபஞ்சம் ஏன் அனைத்தைப்பற்றியுமான தலையாய கேள்வி என்று கூறுகிறார் ஹாக்கிங். இதற்கான விடையைக் காண இந்த நூலில் முயன்றுள்ளார்கள். இந்த நூல் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியிடப்படலாம் என்று தெரிகிறது.


One Response so far.

  1. Unknown says:

    Great sir and special thanks

Leave a Reply